புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 05-04-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 18-04-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 76/2022.
கோயம்புத்தூர் நகர், நஞ்சுண்டபுரம், சுசீலா நகர், D-10, ஆர் ஆர் காஜல் ஞானம் அடுக்குமாடி குடியிருப்பு, இலக்கம் 3/58, B2S2, -ல் வசிக்கும் ஜெய்சிங் வசந்தகுமார் மகன் ஜானி ரத்தீஷ் -முறையீட்டாளர்
- எதிர்-
1. புது தில்லி, ஓக்லா தொழில்பேட்டை, பகுதி இரண்டு, இலக்கம் ஏ 79, டிடிஎ செட் -ல் உள்ள M/s. UM Lohia Two Wheeelers Pvt Ltd., அதன் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலம்,
2. புது தில்லி, ஓக்லா தொழில்பேட்டை, பகுதி இரண்டு, இலக்கம் ஏ 79, டிடிஎ செட் -ல் உள்ள M/s. UM Lohia Two Wheeelers Pvt Ltd., நிறுவனத்தின் சேவை பொறியாளர் திரு மல்லிகார்ஜுன்
3. கோயம்புத்தூர் நகர், சுங்கம் புறவழிச்சாலை இலக்கம் 19/2 & 3 -ல் உள்ள M/s. Karunakaran Wheels Indis Pvt Ltd., அதன் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலம். - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு. வினோத், வழக்கறிஞ,ர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு எம். எஸ். பாலாஜி ஸ்ரீதர், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 11-04-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முறையீட்டாளரின் நிரூபண வாக்குமூலம் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமக்கு விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தை பெற்றுக்கொண்டு புதிய இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என்றும் அல்லது தம்மால் செலுத்தப்பட்ட தொகை ரூ 1,96,929/-ஐ வட்டியுடன் எதிர் தரப்பினர்கள் தமக்கு திருப்பி தர வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 50,000/-ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகை ரூ 5 ஆயிரத்தை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் உகந்தது என இந்த ஆணையம் கருதும் இதர பரிகாரங்களை தமக்கு வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம்
03. முதலாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை கடந்த 19-01-2017 ஆம் தேதியில் மூன்றாம் எதிர் தரப்பினிடம் ரூ 1,96,929/- செலுத்தி வாங்கினேன் என்றும் இவ்வாறு வாங்கப்பட்ட பின்பு சில தினங்களிலேயே வாகனத்தில் பழுது ஏற்பட்டது என்றும் இவ்வாறு 3 அல்லது 4 முறை வாகனத்தில் முக்கியமான பிரச்சனைகள் ஏற்பட்டு பழுது நீக்க கொடுத்த போது மூன்றாம் எதிர் தரப்பினரின் பணிமனையில் மிகவும் காலம் தாழ்த்தி சேவை புரிந்தார்கள் என்றும் ஒவ்வொரு முறையும் இருசக்கர வாகனத்தின் ஒவ்வொரு பகுதியில் பிரச்சனை ஏற்பட்டு அந்த பாகத்தை மாற்றி தர மிகுந்த காலதாமதம் செய்தார்கள் என்றும் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருந்த காரணத்தால் முதலாம் எதிர்த்தரப்பில் தொடர்பு கொண்டும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் முதலாம் எதிர் தரப்பினர் இரண்டாம் எதிர் தரப்பினரை தமது வாகனத்தை சரி செய்து தருமாறு தெரிவித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தற்போது வாகனம் உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் பணியாளர்கள் வாகனத்தில் உற்பத்தி குறைபாடு உள்ளதால்தான் இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதாக ஒப்புக்கொண்டனர் என்றும் இதனையே இரண்டாம் எதிர் தரப்பினரும் ஒப்புக்கொண்டார் என்றும் இதனால் வாகனத்தை எடுத்துக்கொண்டு புதிய வாகனம் வழங்குமாறு கேட்டும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் வேறு வழியின்றி 05-12-2017 ஆம் தேதியில் வழக்கறிஞர் அறிவிப்பு எதிர் தரப்பினர்களுக்கு அனுப்பியும் தமக்கு எந்தவிதமான பரிகாரமும் கிடைக்கவில்லை என்றும் எதிர் தரப்பினர்கள் குறைபாடுகளுடன் உற்பத்தி செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை தமக்கு விற்பனை செய்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தவறு புரிந்துள்ளார்கள் என்றும் இதனால் தமக்கு இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தமக்கு விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தை பெற்றுக்கொண்டு புதிய இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என்றும் அல்லது தம்மால் செலுத்தப்பட்ட தொகை ரூ 1,96,929/-ஐ வட்டியுடன் எதிர் தரப்பினர்கள் தமக்கு திருப்பி தர வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 50,000/-ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகை ரூ 5 ஆயிரத்தை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் உகந்தது என இந்த ஆணையம் கருதும் இதர பரிகாரங்களை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதிலின் சுருக்கம்
05. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் ஆணையத்தின் அறிவிப்பை பெற்றுக்கொண்டு ஆஜரான போதிலும் பதில் அளிக்காததால் ஒரு தலைப் பட்ச ஆணை அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பின்னர் அதனை ரத்து செய்ய விண்ணப்பித்து அந்த விண்ணப்பமும் அனுமதிக்கப்பட்ட பின்னரும் எவ்வித பதிலையும் இந்த ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவில்லை. மூன்றாம் எதிர் தரப்பினர் மட்டும் புகாருக்கு பதில் அளித்து உள்ளார்.
06. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் இன்னும் பிற சங்கதிகளை விரிவாக தெரிவித்தும் மூன்றாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி அவரது புகாரை நிரூபிக்க தமது தரப்பில் சாட்சியமாக நிரூபணம் வாக்குமூலத்தை மட்டும் தாக்கல் செய்துவிட்டு சான்றாவணங்களை குறியீடு செய்து தமது தரப்பை நிரூபிக்க முறையீட்டாளர் இந்த ஆணையத்தின் முன்பு பல வாய்ப்புகள் வழங்கியும் ஆஜராகவில்லை. ஆணையத்திலிருந்து இறுதி அறிவிப்பு அனுப்பிய பின்னர் ஆஜராகவும் இல்லை. தமது வழக்கறிஞர் மூலம் எந்தவித பிரதிநிதித்துவமும் செய்யவில்லை. இதனால் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் முறையீட்டாளர் நிரூபிக்கவில்லை என நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
09. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
10. இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 18-04-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
உறுப்பினர் – I தலைவர்
முறையீட்டாளர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
எதிர்தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர்கள் தரப்பு சாட்சி: இல்லை
எதிர்தரப்பினர் சாட்சி: இல்லை
உறுப்பினர் – I தலைவர்