புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 27-06-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 11-07-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 122/2022.
கோவை, ஆர். எஸ். புரம், பி. எம். சாமி காலனி, மூன்றாவது தெரு இலக்கம் 6/125 -ல் வசிக்கும் சண்முக நாடார் மகன் எஸ் ஜெயராமன் - முறையீட்டாளர்
- எதிர்-
01. கோயம்புத்தூர், பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர்,
02. கோயம்புத்தூர், பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்
03. கோயம்புத்தூர், பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் பி-2 பிரிவு அலுவலர், - எதிர் தரப்பினர்கள்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர் தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு அவரே முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு கே. தாமோதரன், அரசு வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 13-06-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள்-14, எதிர் தரப்பினர்களின் பதிலுரை, சாட்சியம்-1, சான்றாவணங்கள்-01 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. தமது மகன் அமர்நாத் கடந்த 03-11-1976 ஆம் தேதியில் வீட்டிலேயே பிறந்தார் என்றும் அவரது பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றும் தற்போது அவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார் என்றும் அங்கு கிரீன் கார்டு பெறுவதற்காக பிறப்பு சான்றிதழ் தேவைப்பட்ட நிலையில் கோவை மாநகராட்சியில் தாம் அதற்காக விண்ணப்பம் செய்தேன் என்றும் அங்கு பிறப்பு பதியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு விட்டதால் கோவையில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் ரூ 500/- கட்டணம் செலுத்தி விண்ணப்பம் தாக்கல் செய்தேன் என்றும் 14-02-2018 ஆம் தேதியில் இந்த ரசீதை கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தேன் என்றும் தேவையான ஆவணங்களை எதிர் தரப்பினரிடம் வழங்கியும் அவர்கள் தமது மகனின் பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு மிகுந்த காலதாமதம் செய்து வருகிறார்கள் என்றும் இது குறித்து கடந்த 07-04-2018 ஆம் தேதியில் தான் பதிவு அஞ்சல் மூலம் எதிர் தரப்பினர்களுக்கு கடிதம் எழுதியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் கட்டணம் பெற்றுக்கொண்டு பிறப்புச் சான்றை வழங்காமல் எதிர் தரப்பினர்கள் காலதாமதம் செய்து வருகிறார்கள் என்றும் இதனால் தமக்கு மிகுந்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்து எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்காகவும் அதனால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் ரூ 19,00,000/- மற்றும் வழக்குச் செலவிற்காக ரூ 20,000/- தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்று தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
03. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் புகாரில் உள்ள சங்கதிகளை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முறையீட்டாளர் அவரது மகன் அமர்நாத் என்பவரின் பிறப்பு பதியப்படவில்லை என்று இதற்கான 21-12-2017 ஆம் தேதிய சான்றிதழ் பெற்றிருந்தார் என்றும் கடந்த 2017 ஜூலை மாதத்தில் வருவாய் கோட்டாட்சியரிடம் பிறப்பை பதிய கோரி விண்ணப்பத்தை அவர் தாக்கல் செய்த பின்னர் அதன் மீது தக்க நடவடிக்கைக்காக தங்களுக்கு அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் முறையீட்டாளர் தரப்பில் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்து வந்தார்கள் என்றும் கேட்கும் பிறப்புச் சான்றிதழ் மூலம் பிறந்த முறையீட்டாளரின் மகன் அமெரிக்காவில் இருப்பதால் நேரடியாக பார்த்து விசாரிக்க இயலவில்லை என்றும் இவர் பல காலத்திற்கு முன்பு வேறு ஒரு முகவரியில் பிறந்ததாக கூறப்படும் நிலையில் அந்தப் பகுதியில் விசாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும் முறையீட்டாளரின் இரண்டாவது மகன் அரவிந்தன் அமெரிக்காவில் உள்ளதாகவும் மூன்றாவது மகன் அருள் சிங்கப்பூரில் உள்ளதாகவும் முறையீட்டாளர் தெரிவித்தாரே தவிர அவர்களின் பிறப்புச் சான்றிதழ்களையும் ஆதாரங்களாக தாக்கல் செய்யவில்லை என்றும் எவ்வாறு இருப்பினும் விசாரணை முடித்து கோட்டாட்சியிடம் 22-03-2018 ஆம் தேதி அறிக்கை சமர்ப்பித்த பின்னர் கோட்டாட்சியர் 17-04-2018 ஆம் தேதிய செயல்முறை ஆணை மூலம் பிறப்பை பதிய உத்தரவிட்டார் என்றும் அதன் அடிப்படையில் பிறப்பு பதியப்பட்டு கடந்த 17-04-2018 ஆம் தேதியில் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது என்றும் இவ்வாறு சான்றிதழை பெற்ற பின்பு தீய நோக்கத்துடன் அரசு அலுவலர்களை சிரமப்படுத்தும் எண்ணத்தில் முறையீட்டாளர் புகாரை தாக்கல் செய்துள்ளார் என்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் உள்ள நிலையில் அந்த அதிகாரம் இல்லாத தங்கள் மீது புகார் தாக்கல் செய்து அதிகாரம் உள்ள வருவாய் கோட்டாட்சியர் தரப்பினராக கோட்டாட்சியரை தரப்பினராக சேர்க்காமல் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் இதனால் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர்தரப்பினர்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள் .
04. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளாரா?
2) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனர் எனில் எத்தகைய பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
05. தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 இன் படி குழந்தை பிறந்ததும் ஓராண்டு காலத்துக்குள்ளாக பதிவு செய்யப்பட வேண்டும். அதற்குப் பிறகும் பதிவு செய்யப்படவில்லை என்றால் தாமதக் கட்டணத்துடன் பதிவு செய்வதற்கு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்பு பிறப்பை பதிவு செய்ய வேண்டுமென்றால் பிறப்பு பதியப்படவில்லை என்ற சான்றிதழை பெற்று வருவாய் கோட்டாட்சியரிடம் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதன் மீது விசாரணை நடத்தி பிறப்பு பதிவு செய்வதா? அல்லது செய்வதில்லையா? என்ற ஆணையை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பிப்பார். இத்தகைய பணிகள் அரசின் இறையாண்மை பணிகளில் ஒன்றாகும் மாறாக சேவை வழங்குபவர் சேவை பெறுபவர் என்ற உறவு முறை இங்கு கிடையாது. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் தமது மகன் பிறந்து சுமார் 42 ஆண்டுகள் கழித்து அதனை பதிவு செய்யக்கோரி கோட்டாட்சியரிடம் தகுந்த கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளார் என்பதை முறையீட்டாளரின் சான்றாவணங்கள் மூலம் அறிய முடிகிறது. இத்தகைய இறையாண்மை பணிக்காக அரசுக்கு முறையீட்டாளரால் செலுத்தப்பட்ட கட்டணம் என்பது சேவை கட்டணம் அல்ல என்றும் இதனால் முறையீட்டாளர் எதிர்த்தரப்பினர்களின் நுகர்வோர் அல்ல என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
06. பிறப்பு சான்றை பெறுவதற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்துவிட்டு பிறப்புச் சான்று பெற காலதாமதம் ஏற்பட்டால் வருவாய் கோட்டாட்சியர் மீது புகார் தாக்கல் செய்வதற்கு பதிலாக பிறப்புச் சான்று பதிவு குறித்து விசாரணை செய்து தருமாறு வருவாய் கோட்டாட்சியரால் உத்தரவிடப்பட்ட வருவாய் வட்டாட்சியரையும் அவருக்கு கீழ் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்களையும் புகாரின் தரப்பினர்களாக சேர்த்து இந்த ஆணையத்தில் முறையீட்டாளர் புகார் தாக்கல் செய்துள்ளது தவறான நடவடிக்கை என்றும் இதன் மூலம் அரசு அலுவலர்களுக்கு மிகுந்த கால விரையமும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த ஆணையம் கருதுகிறது.
07. முறையீட்டாளர் பிறப்புச் சான்று கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பத்தில் அதன் மீது விசாரணை நடத்தி அறிக்கை தர வருவாய் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையை பெற்ற பின்னர் 17-04-2018 ஆம் தேதிய செயல்முறை ஆணை மூலம் பிறப்பை பதிய உத்தரவிட்ட அடிப்படையில் பிறப்பு பதியப்பட்டு கடந்த 17-04-2018 ஆம் தேதியில் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது என்ற விவரத்தை மறைத்து 2018 ஏப்ரல் மாதத்தில் இந்த புகாரை முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 அக்டோபர் மாதத்தில் முதல் விசாரணைக்காக முறையீட்டாளர் தாக்கல் செய்த நிரூபண வாக்குமூலத்திலும் தமது மகனின் பிறப்புச் சான்றிதழை கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் பெற்றுவிட்டதாக குறிப்பிடாமல் சங்கதிகளை மறைத்து நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், எதிர் தரப்பினர்கள் தரப்பில் கோட்டாட்சியரின் செயல்முறை ஆணை மற்றும் முறையீட்டாளர் மகனின் பிறப்புச் சான்றிதழ் ஆகியன சான்றாவணங்களாக குறியீடு செய்யப்பட்டுள்ளது.
எழு வினா எண் – 2
08. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 3
09. சேவை வழங்குபவர் சேவை பெறுபவர் என்ற நுகர்வோர் உறவு முறை அல்லாத அரசு பணி தொடர்பாக கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்துவிட்டு அவரை தரப்பினராக சேர்க்காமல் கேட்கும் பரிகாரத்துக்கு நேரடியாக பொறுப்பு வகிக்காதஅரசு அலுவலர்களை இந்த புகாரில் தரப்பினர்களாக சேர்த்து அவர்களை சிரமப்படுத்தியது, முறையீட்டாளரின் மகனுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பு அச்சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது என்பதை இந்த ஆணையத்தில் மறைத்தது உள்ளிட்ட வழக்கின் தன்மைகளைக் கருதி முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினருக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 பிரிவு 39 (1) m- ன்படி வழக்கு செலவு தொகையாக ரூபாய் 5000 இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. சேவை வழங்குபவர் சேவை பெறுபவர் என்ற நுகர்வோர் உறவு முறை அல்லாத அரசு பணி தொடர்பாக கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்துவிட்டு அவரை தரப்பினராக சேர்க்காமல் கேட்கும் பரிகாரத்துக்கு நேரடியாக பொறுப்பு வகிக்காத அரசு அலுவலர்களை புகாரில் தரப்பினர்களாக சேர்த்து அவர்களை சிரமப்படுத்தியது, முறையீட்டாளரின் மகனுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பு அச்சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது என்பதை இந்த ஆணையத்தில் மறைத்தது உள்ளிட்ட வழக்கின் தன்மைகளைக் கருதி முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினருக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 பிரிவு 39 (1) m- ன்படி வழக்கு செலவு தொகையாக ரூபாய் 5,000/- இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 11-07-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
மு.சா.ஆ.1 | 13-04-2017 | பிறப்பு சான்றுக்கான விண்ணப்பம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.2 | 13-04-2018 | கட்டண ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.3 | 11-07-2017 | கோட்டாட்சியர் கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.4 | 14-02-2018 | வங்கியில் செலுத்திய ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.5 | 14-02-2018 | வட்டாட்சியர் அலுவலக ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.6 | 19-03-2018 | மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட புகார் நகல் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.7 | 19-03-2018 | ரசீது | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.8 | 22-03-2018 | வட்டாட்சியர் கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.9 | 07-04-2018 | எதிர் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.10 | 09-04-2018 | அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.11 | 07-04-2018 | எதிர் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.12 | 09-04-2018 | அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.13 | 07-04-2018 | எதிர் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட கடிதம் | ஜெராக்ஸ் |
மு.சா.ஆ.14 | 09-04-2018 | அஞ்சல் ஒப்புகை அட்டை | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எ.சா.ஆ.1 | - | வட்டாட்சியர் கடிதம், வருவாய் கோட்டாட்சியர் ஆணை, முறையீட்டாளர் மகனின் பிறப்புச் சான்றிதழ் | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி திரு எஸ் ஜெயராமன், முறையீட்டாளர்
எதிர் தரப்பினர்கள் சாட்சி திரு சுரேஷ்குமார், துணை வட்டாட்சியர்
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.