புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 31-01-2018 (Coimbatore)
உத்தரவு பிறப்பித்த நாள் : 01-08-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 28/2022.
கோயம்புத்தூர், கோவில்பாளையம், எஸ் எஸ் குளம் அஞ்சல், இலக்கம் /2 73 -ல் வசிக்கும் கணேசன் மகன் கே பழனி -முறையீட்டாளர்
- எதிர்-
கோயம்புத்தூர், கே. வடமதுரை, கருடம்பாளையம் அஞ்சல், இலக்கம் 4.1180, அண்ணா நகரில் உள்ள மங்கலம் ஹரிணி பில்டர்ஸ் உரிமையாளர் ஆர் வெங்கடாசலம் - எதிர் தரப்பினர்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன்படி முறையீட்டாளர் எதிர் தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து, முறையீட்டாளருக்கு திருவாளர்கள் சி. ஸ்ரீ வத்சன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திருவாளர்கள் எம். கர்ணன், ஜி. சுப்பிரமணியன் மற்றும் ஆர். ராகுல் ராவ், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 10-07-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, முறையீட்டாளரின் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. எதிர் தரப்பினரின் விளம்பரத்தை பார்த்து அவரால் உருவாக்கப்பட்ட காலி மனைகள் கொண்ட பகுதியில் 70 என்ற எண் கொண்ட காலி மனை இடத்தை (house site No 70) கடந்த 16-11-2012ஆம் தேதியில் கிரைய ஆவணம் மூலம் விலைக்கு வாங்கினேன் என்றும் அதே நாளில் எதிர் தரப்பினருக்கும் தமக்கும் கட்டிட ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது என்றும் அதன் அடிப்படையில் கட்டிடம் கட்டித் தருவதற்கு ஆறு மாத காலம் என்று அளவு நிர்ணயம் செய்யப்பட்டு மொத்தம் 902 சதுர அடி பரப்பு கட்டிடம் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ1350 என்ற அடிப்படையிலும் பிற தேவைகளை கருதி அதன் விலைகளை நிர்ணயம் செய்தும் மொத்தம் தாம் ரூ 17,88,075/- வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் என்றும் இன்னும் பிற விவரங்களுடன் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் இந்நிலையில் கட்டிடத்தை முழுவதும் கட்டி முடித்து விட்டதாக கூறி ஏற்கனவே ரூ 19,55,800/- தொகையை பெற்றுக் கொண்ட பின்னர் மேலும் ரூ 4,20,847 வேண்டுமென்றும் அவ்வாறு தந்தால் தான் கட்டிடத்தை ஒப்படைப்பு செய்ய இயலும் என எதிர் தரப்பினர் தெரிவித்தார் என்றும் மேலும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை பார்வையிட்டபோது தரம் குறைந்த நிலையில் அது காணப்பட்டது என்றும் ஒப்பந்தத்தை விட கூடுதலாக கட்டிடத்தை கட்ட கால அவகாசம் எதிர் தரப்பினர் எடுத்துக் கொண்டார் என்றும் ஒப்பந்தத்தை விட கூடுதலாக தொகையை நிர்பந்திப்பது சரியானது அல்ல என்றும் எதிர் தரப்பினருக்கு 26-01-2016 ஆம் தேதியில் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பிய போது தவறான தகவல்களுடன் அவர் பதில் அறிவிப்பு வழங்கினார் என்றும் இத்தகைய எதிர்த் தரப்பினரின் செயல்கள் சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரி ல் தெரிவித்துள்ளார்.
04. எனவே, எதிர்த் தரப்பினர் ஒப்பந்தப்படி கட்டிடத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து ஒப்பந்தப்படி கட்டிடத்தை தமக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 2,00,000/- மற்றும் தமக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மன சிரமங்களுக்கு ரூ 10,000/- மற்றும் இந்த வழக்கின் செலவு தொகை ஆகியவற்றை எதிர் தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் சரியான இந்த ஆணையம் கருதும் இதர தீர்வுகளையும் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
05. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
06. புகாரில் கூறியுள்ளது போல அவருக்கும் தமக்கும் 16-11-2012 ஆம் தேதியில் கட்டிட ஒப்பந்தம் ஏற்பட்டது உண்மை என்றும் தங்கள் தரப்பில் ரூ23,76,647/- மதிப்புக்கான செய்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்றும் அதனை அவர் தர வேண்டியது கடமை என்றும் முறையீட்டாளர் இதுவரை ரூ 19,55,800/- மட்டுமே வழங்கி உள்ளார் என்றும் இதற்கு உரிய ரசீதுகளை வழங்கிய பின்னரும் தமக்கு தரவேண்டிய ரூ 4,20,847/- ஐ தருமாறு முறையீட்டாளரை கேட்டபோது அவர் அதனை வழங்கவில்லை என்றும் ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடி சரியான தரத்தில் தம்மால் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் முறையீட்டாளர் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள தமக்கும் அவருக்கும் ஏற்பட்ட கட்டிட ஒப்பந்தம் என்பது மோசடியானது என்றும் உண்மையான ஒப்பந்தத்தை அவர் தாக்கல் செய்யவில்லை என்றும் அதனால் அசல் ஒப்பந்தத்தை அவர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வேறு வாடிக்கையாளருக்கு தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி மோசடியாக மாற்றம் செய்து இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ளார் என்றும் முறையீட்டாளர் தமக்கு வழங்கிய 23-11-2016 ஆம் தேதிய வழக்கறிஞர் அறிவிப்பிற்கு முறைப்படி பதில் வழங்கப்பட்டுள்ளது என்றும் தீய நோக்கத்துடன் தம்மீது புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்நிலையில் முறையீட்டாளர் கூறுவது போல் எத்தகைய பரிகாரத்தையும் தாங்கள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரது புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர்தரப்பினர்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள் .
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் நுகர்வோர் ஆவாரா? முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
2) எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
3) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளருக்கும் தமக்கும் கட்டிட ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது என்றும் அதன் அடிப்படையில் அவர் பணம் செலுத்தினார் என்றும் எதிர் தரப்பினர் பதில் உரையில் ஒப்புக் கொண்டுள்ளதால்முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
09. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ள சங்கதிகளை நிரூபிக்க சாட்சியம் மற்றும் சான்றாவணங்களை இந்த ஆணையத்தில் சமர்ப்பித்து வாதம் செய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் முறையீட்டாளர் எவ்வித சாட்சியத்தையும் அளித்து சான்றாணங்களை குறியீடு செய்ய தவறி விட்டார். மேலும் முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டியல் ஆவணங்களில் முறையீட்டாளருக்கும் எதிர் தரப்பினருக்கும் ஏற்பட்டதாக கூறப்படும் கட்டுமான ஒப்பந்தத்தில் முறையீட்டாளரின் பெயர் பழனி என கீழே எழுதப்பட்ட போதிலும் மேலே அவரது கையொப்பத்துக்கு மாறாக வேறு நபர் கையொப்பம் செய்துள்ளது அறிய முடிகிறது என்றும் இந்த ஆணையம் கருதுகிறது. மேற்கண்ட கையொப்பத்துடன் கூடிய வேறு வாடிக்கையாளரின் கட்டுமான ஒப்பந்தமும் முறையீட்டாளருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கட்டுமான ஒப்பந்தமும் எதிர் தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முறையீட்டாளர் போதிய சாட்சியம் மற்றும் சான்றாவணங்களுடன் தனது புகாரை நிரூபிக்கவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 2 & 3
10. முதலாம் எழு வினாவை தீர்மானிக்கும் போது எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு முறையீட்டாளருக்கு எவ்வித இழப்பீடும் எதிர் தரப்பினர் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 01-08-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: இல்லை
எதிர் தரப்பினர் சாட்சி: இல்லை
ஒம்/- ஒம்/-
உறுப்பினர் – I தலைவர்.