புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 23-02-2017
உத்தரவு பிறப்பித்த நாள் : 16-12-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் (RBT) எண்: 41/2022.
சென்னை, தாழம்பூர், அரிகன்ட் ஹேர்லூம், இலக்கம் R 13 -ல் வசிக்கும் சீனிவாசன் -முறையீட்டாளர்
1 & 2 சென்னை, நீலாங்கரை, வைத்தியலிங்கம் சாலை, 5வது குறுக்கு தெரு, பிளாட் எண்- 87 -ல் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற நந்தினி சத்யநாராயணன் -1, இதே முகவரியில் வசிக்கும் சத்தியநாராயணன் -2
3. சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், இரண்டாவது தெரு, சங்கம் காலனி இலக்கம் ஒன்றில் வசிக்கும் அரவமுதன்
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருமதி ஆர். தனலட்சுமி, வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு ஜே. கௌதமன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 06-12-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-01, முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள் – 11, எதிர் தரப்பினரின் பதிலுரை, எதிர்தரப்பினர களின் சாட்சியம் -01 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமது தரப்பில் நந்தினி மூத்த குடிமக்கள் இல்லத்துக்கு செலுத்திய ரூ 3 லட்சம், தமது தந்தைக்கு ஏற்பட்ட மருத்துவ செலவு ரூ 1.5 லட்சம், தமக்கும் தமது இரண்டு சகோதரர்களுக்கும் இழப்பீடாக தலா ரூ 5 லட்சம் மற்றும் வழக்கின் செலவு தொகை ஆகியவற்றை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
- தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. நந்தினி மூத்த குடிமக்கள் இல்லம் என்ற பெயரில் எதிர் தரப்பினர்கள் சேவை வழங்கி வருவதை அவர்களது விளம்பரங்கள் மூலம் அறிந்து தமது தந்தையை கடந்த 21-07-2016 ஆம் தேதியில் இந்த இல்லத்தில் ரூ 1,50,000/- வைப்புத் தொகையாக செலுத்தி மாதம் ரூ 50,000/- பராமரிப்பு கட்டணமாக செலுத்த ஒப்புக்கொண்டு சேர்த்தோம் என்றும் தமது 96 வயதான தந்தையை கடந்த 08-11-2016 ஆம் தேதியில் வலுக்கட்டாயமாக மேற்படி இல்லத்திலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்றும் இதுகுறித்து தமது தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது என்றும் இதன்பின்னர் எதிர் தரப்பினர்கள் தங்களுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினார்கள் என்றும் தாம் பதில் அனுப்பியுள்ளேன் என்றும் சேவைக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு ஒப்புக்கொண்ட சேவையை புரியாமல் தனது தந்தையை வலுக்கட்டாயமாக இல்லத்தில் இருந்து வெளியேற்றியது சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பு சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, , தமது தரப்பில் நந்தினி மூத்த குடிமக்கள் இல்லத்துக்கு செலுத்திய ரூ 3 லட்சம், தமது தந்தைக்கு ஏற்பட்ட மருத்துவ செலவு ரூ 1.5 லட்சம், தமக்கும் தமது இரண்டு சகோதரர்களுக்கும் இழப்பீடாக தலா ரூ 5 லட்சம் மற்றும் வழக்கின் செலவு தொகை ஆகியவற்றை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
05. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. முறையீட்டாளர் புகாரில் தெரிவித்துள்ளது போல தங்களது மூத்த குடிமக்களுக்கான இல்லத்தில் தமது தந்தையை சேர்க்க கடந்த 2016 ஜூலை மாதத்தில் தங்களை அணுகினார் என்றும் அவரது தந்தை சர்க்கரை நோய் உள்ளவர் என்றும் படுத்த படுக்கையாக இருப்பவர் என்றும் அவரால் படுக்கையில் இருந்து தானாக எழுந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தார் என்றும் அவர் தங்களது இல்லத்தில் 4 மாதங்கள் மகிழ்ச்சியாக தங்கியிருந்தார் என்றும் நல்ல முறையில் தாங்கள் அவரை பராமரித்து கொண்டோம் என்றும் 01-11-2016 ஆம் தேதியில் முறையீட்டாளரின் தந்தை மிகுந்த நோய்வாய்ப்பட்டதன் காரணமாகதங்கள் தரப்பில் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டு முறையீட்டாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் தங்கள் இல்லத்திற்கு வந்து தமது தந்தையைப் பார்த்த பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று தெரிவித்துவிட்டார் என்றும் பின்னர் கடந்த 08-11-2016 ஆம் தேதியில் முறையீட்டாளர் தமது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் என்றும் அதன்பின்னர் தங்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தார் என்றும் தங்கள் இல்லத்திற்கு அடையாளம் தெரியாத ஆட்களை அழைத்து வந்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார் என்றும் தாங்கள் வலுக்கட்டாயமாக முறையீட்டாளரின் தந்தையை இல்லத்திலிருந்து வெளியேறினோம் என்பது உண்மை அல்ல என்றும் தாங்கள் முறையீட்டாளரிடம் ரூ 1,50,000/- வைப்புத்தொகை பெற்றிருப்பது உண்மை என்றும் அதில் மருத்துவச் செலவு உள்ளிட்ட தங்கள் தரப்பில் செய்யப்பட்ட செலவினங்களைக் கழித்துக்கொண்டு ரூ1,09,370/- திருப்பி அளிக்க தயாராக இருப்பதாகவும்தங்கள் தரப்பில் சேவை குறைபாடு எதுவும் இல்லை என்றும் முறையீட்டாளர் புகார் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
08. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் ஆகிய தாங்கள் மூத்த குடிமக்களை பராமரிப்பதற்காக இல்லம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கடந்த 21-07-2016 ஆம் தேதியில் முறையீட்டாளர் அவரது தந்தையை தங்களது இல்லத்தில் பணம் செலுத்தி சேர்த்தார் என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் முதலாம் எதிர் தரப்பினரின் தந்தை என்றும் தங்களது சேவை புரியும் மூத்த குடிமக்கள் இல்லத்துக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையில் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதனால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் மேற்படி இல்லத்தை நடத்தி வருவதாக முறையீட்டாளர் தரப்பில் எவ்வித சாட்சியங்களையும் தாக்கல் செய்யாத நிலையில் மூன்றாம் தரப்பினர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
09. தமது தந்தை எதிர் தரப்பினர்கள் நடத்தும் நந்தினி மூத்த குடிமக்கள் இல்லத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்பதை நிரூபிக்க முறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது காவல் நிலையத்தில் அளித்த புகார் மற்றும் புகார் ஏற்புச் சான்றிதழ் ஆகியன அவர் தரப்பில் சான்றாவணங்களாக குறியீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுகுறித்து எவ்வித முதல் தகவல் அறிக்கையும் காவல்துறையில் பதியப்படவில்லை இந்நிலையில் இந்த ஆவணங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக கருத இயலாது என்றும் முறையீட்டாளர் தக்க சாட்சியும் மற்றும் ஆவணங்களோடு நிரூபிக்கவில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. முறையீட்டாளர் தமது தந்தையை எதிர் தரப்பினர்கள் நடத்தும் மூத்த குடிமக்கள் இல்லத்தில் ரூ 1,50,000/- முன்பணமாக வைப்பீடு செய்துள்ளார் என்பதும் 21-07-2016ஆம் தேதி முதல் 08-11-2016 ஆம் தேதி வரை பராமரிப்பு சேவை கட்டணமாக மாதம் ஒன்றுக்கு ரூ 50 ஆயிரம் வீதம் கணக்கிட்டு அவர் தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது என்பதையும் சான்றாவணங்கள் மூலம் நிரூபித்துள்ளார் இதனை எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் மறுக்கவில்லை. தாங்கள் மேற்படி முன்பண வைப்பு தொகை ரூ 1,50,000/- ல் முறையீட்டாளரின் தந்தைக்கு செய்த செலவினங்களைக் கழித்துக்கொண்டு ரூ 1,09,370/- ஐ அம் திருப்பி வழங்க தயாராக இருப்பதாக எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள். முதலாவதாக, மேற்படி முன் பண வைப்பு தொகையில் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு தொகை பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது? என்ற விவரங்களையும் தங்கள் இல்லத்தில் எந்த விதிமுறைகளின்படி இந்த பிடித்தம் செய்யப்படுகிறது? என்ற விவரங்களையும் இதனை நிரூபிக்க போதுமான ஆவணங்களையும் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்யாத நிலையில் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர்கள் தங்களிடம் 21-07-2016 ஆம் தேதியில் செலுத்தப்பட்ட மொத்த முன்பண தொகையும் திருப்பி வழங்க கடமைப்பட்டவர்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இரண்டாவதாக, கடந்த 08-11-2016 ஆம் தேதியில் முறையீட்டாளரின் தந்தை எதிர்த் தரப்பினர்கள் நடத்தும் இல்லத்தில் இருந்து வெளியேறிய பின்னர் சுமார் கடந்த ஐந்து வருடங்களாக மேற்படி முன்பண வைப்புத்தொகையை முறையீட்டாளருக்கு செலுத்தாமல் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் இருந்து வந்துள்ளது சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
11. முதியோர் இல்லங்களை நடத்துவது குறித்து தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் மற்றும் விதிகள், 2009, மேதகு சென்னை உயர்நீதிமன்றம் W.P. 22967/2015 என்ற எண்ணிட்ட வழக்கில் தெரிவித்துள்ள வழக்கின் தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்துக்களையும் தமிழ்நாடு அரசு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறையின் சார்பில் 09-02-2016 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட G.O 16 (MS) என்ற எண்ணிட்ட அரசாணை மற்றும் 23-11-2016 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட G.O 83 (MS) என்ற எண்ணிட்ட அரசாணை ஆகியவற்றில் உள்ள விவரங்களையும் இந்த வழக்கில் கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. முதலாவதாக, மூத்த குடிமக்களுக்கான இல்லம் நடத்துவதற்கு உரிய உரிமம் தமிழக அரசின் சம்பத்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்டதா என்ற விவரத்தை எதிர்த் தரப்பினர்கள் இந்த ஆணையத்தின் தெரிவித்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறிவிட்டனர். இரண்டாவதாக,முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் முதியோர்களை பராமரிக்கும் சேவையை வழங்கும் நிலையில் தாங்கள் வழங்கும் சேவைக்கான சேர்க்கை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றை வடிவமைத்து பின்பற்ற வேண்டும். ஆனால் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் இத்தகைய சேர்க்கை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இந்த ஆணையத்தின் முன்பாக சமர்ப்பிக்கவில்லை. குறைந்தபட்சம் இந்த வழக்கில் முறையீட்டாளரின் தந்தையை தங்களது இல்லத்தில் சேர்க்கும் போது தங்களது நிபந்தனைகளை தெரிவித்து கையொப்பம் பெற்று இருக்க வேண்டும் அத்தகைய நடைமுறைகளும் எதிர்த் தரப்பினர்கள் பின்பற்றியதாக தெரியவில்லை. தங்களது இல்லத்தில் சேர்க்கை மற்றும் பராமரிப்பிற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு தெரிவித்து சம்மதம் பெறாமல் அவரது தந்தைக்கு சேர்க்கை வழங்கி உள்ளது சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
12. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என தீர்மானிக்கப்பட்ட நிலையில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களிடம் 21-07-2016 ஆம் தேதியில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புத்தொகைரூ 1,50,000/- மற்றும் இந்த தொகைக்கு 08-11-2016 ஆம் தேதி முதல் இந்த தொகை செலுத்தப்படும் வரைஆண்டொன்றுக்கு ரூ 100க்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு வரக்கூடிய வட்டி தொகை ஆகியவற்றை முறையீட்டாளருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் சிரமங்களுக்கும் ரூ 1,00,000/- இழப்பீடாக முறையீட்டாளருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் 16-12-2022 தேதி முதல் இந்த தொகை செலுத்தப்படும் வரை ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு மேற்படி தொகையுடன் முறையீட்டாளருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
13. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,2019, பிரிவு 39(1) j -ன்படி ஆபத்தான சேவை வழங்குவதை நிறுத்துமாறு ஆணை பிறப்பிக்க இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில் முதியோர் இல்லங்களை நடத்துவது குறித்து தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் மற்றும் விதிகள், 2009, தமிழ்நாடு அரசு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறையின் சார்பில் 09-02-2016 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட G.O 16 (MS) என்ற எண்ணிட்ட அரசாணை மற்றும் 23-11-2016 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட G.O 83 (MS) என்ற எண்ணிட்ட அரசாணை ஆகியவற்றில் உள்ள முதியோர் இல்லங்களை நடத்த உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் நடத்தும் நந்தினி மூத்த குடிமக்கள் இல்லத்தில் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் நடத்தும் நந்தினி மூத்த குடிமக்கள் இல்லத்தில்தமிழ்நாடு அரசு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறையின் சார்பில் 09-02-2016 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட G.O 16 (MS) என்ற எண்ணிட்ட அரசாணை மற்றும் 23-11-2016 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட G.O 83 (MS) என்ற எண்ணிட்ட அரசாணை ஆகியவற்றில் உள்ள முதியோர் இல்லங்களை நடத்த உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பின்பற்றப்படுகிறதா என்பதை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் சென்னை மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் நியமிக்கப்படும் அலுவலர் ஆய்வு செய்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற எட்டு வார காலத்திற்குள் இந்த ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்கிறது
எழு வினா எண் – 3
13. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று கருதவில்லை. மேலும் வழக்கின் செலவு தொகைகளை அவரவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்களிடம் 21-07-2016 ஆம் தேதியில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புத்தொகைரூ 1,50,000/- மற்றும் இந்த தொகைக்கு 08-11-2016 ஆம் தேதி முதல் இந்த தொகை செலுத்தப்படும் வரைஆண்டொன்றுக்கு ரூ 100க்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு வரக்கூடிய வட்டி தொகை ஆகியவற்றை முறையீட்டாளருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும்.
02. சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் சிரமங்களுக்கும் ரூ 1,00,000/- இழப்பீடாக முறையீட்டாளருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் 16-12-2022 தேதி முதல் இந்த தொகை செலுத்தப்படும் வரை ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு மேற்படி தொகையுடன் முறையீட்டாளருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும்.
03. முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் நடத்தும் நந்தினி மூத்த குடிமக்கள் இல்லத்தில் முதியோர் இல்லங்களை நடத்துவது குறித்து தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் மற்றும் விதிகள், 2009, தமிழ்நாடு அரசு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறையின் சார்பில் 09-02-2016 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட G.O 16 (MS) என்ற எண்ணிட்ட அரசாணை மற்றும் 23-11-2016 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட G.O 83 (MS) என்ற எண்ணிட்ட அரசாணை ஆகியவற்றில் உள்ள முதியோர் இல்லங்களை நடத்த உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பின்பற்றப்படுகிறதா என்பதை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் சென்னை மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் நியமிக்கப்படும் அலுவலர் ஆய்வு செய்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற எட்டு வார காலத்திற்குள் இந்த ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,2019, பிரிவு 39(1) j -ன்படி பரிந்துரை செய்கிறது. மூன்றாம் எதிர்தரப்பினர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது
04. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 16-12-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | - | அடையாள அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | - | நந்தினி மூத்த குடிமக்கள் இல்ல விளம்பரம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | - | உரையாடல் பரிவர்த்தனைகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 08-11-2016 | காவல் துறையில் செய்த புகார் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | - | வண்ண புகைப்படம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 08-11-2016 | குறிப்புகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 08-11-2016 | புகார் மனு ஏற்பு சான்றிதழ் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | - | பணம் செலுத்திய ரசீதுகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | - | மருத்துவ செலவு ரசீதுகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 10-11-2016 | வழக்கறிஞர் அறிவிப்பு பதில் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | 15-11-2016 | இறப்புச்சான்றிதழ் | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு சீனிவாசன்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: இல்லை
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.